ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள்

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அட்டவணை:

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன!

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல், இவ்வாண்டு 09 ஏப்ரல் தொடக்கம் 20 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில் இன்று பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது, இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்று தொடக்கம், அடுத்த வாரம் வெள்ளி வரை (20/04/2012) அனுசரிக்கப்படும் இந்த இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்களின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் உள்ள தொடர்பினை நீங்கள் கிளிக் செய்து காணலாம்.

இவ்விரு வாரங்களின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்! 

 

 

 

 

 




ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

தமிழ் மொழி மாதம் தொடங்கிவிட்டது!

01 ஏப்ரல் 2012 தொடக்கம் 29 ஏப்ரல் 2012 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.thangameen.com/tmvizha என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல், இவ்வாண்டு 09 ஏப்ரல் தொடக்கம் 20 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழி கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அதனை முன்னிட்டு, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இந்த வலைப்பூவில் விரைவில் காணலாம்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

சனி, 31 மார்ச், 2012

தமிழ்மொழி விழா பாடல்கள்



பாடல் : ஷபிர்

தமிழ்மொழி வாழ்த்து


பாடல் வரிகள்: மகாகவி  பாரதியார்
பாடல் இசை: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்


வெள்ளி, 30 மார்ச், 2012

வளமான வரிகள்


பாடல் வரிகள் : பா.விஜய்

திங்கள், 26 மார்ச், 2012

நாடகப் பட்டறை வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்காக நாடகப் பட்டறை வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை ரவீந்திரன் நாடகக் குழுவைச் சேர்ந்த திரு.சௌந்தராஜன் அவர்கள் வழிநடத்துகிறார். இவர் நிஜங்கள் என்ற வசந்தம் நாடகத்தொடரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புகளின் இறுதியில் மாணவர்கள் ஒரு நாடகத்தைப் படைக்கவிருக்கின்றனர். அடுத்த தவணையில் நடைபெறும் தமிழ் மாணவர்க் கூட்டத்தின் போது அந்த நாடகம் மற்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒளியேற்றப்படும். இந்த நாடகப் பட்டறை வகுப்புகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


வியாழன், 15 மார்ச், 2012

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் (த.தி.மே.தி) தொடங்கியது

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒன்றுக்கு முதன்முறையாகப் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மாணவர்களிடையே கற்பனைத் திறன் (Imagination), புத்தாக்கத் திறன் (Creativity), சிந்தனைத் திறன் (Criticial Thinking) மற்றும் படைப்பாற்றல் திறன் (Presentation Skill) முதலியவற்றை அண்மைய தொழில்நுட்பத்தைக் கொண்டு வளர்த்தல், அவர்களுக்குப் படச்சுருள் தயாரிப்புத் தொடர்பான திறன்களைக் கற்பித்தல், தொழில்நுட்பத் தொடர்பான போட்டிகளில் பங்குபெறுவதற்குத் தயார் படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்குச் சில தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் தமிழ் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 12/03/2012 அன்று இத்திட்டத்தின் முதல் வகுப்பு நடைபெற்றது. முதல் கட்டமாக, மாணவர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் அவர்கள் இத்திட்டத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 

 

 

 





இத்திட்டத்தின் வழி மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு விரைவில் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரு சிறந்த படைப்பை வழங்குவர் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இரண்டாம் வகுப்புக்கான ‘நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன்’ முகாம்

கடந்த 09/03/2012 அன்று தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளியின் தாய்மொழிப் பிரிவு நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன் என்ற தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம் தொடக்கநிலை இரண்டாம் வகுப்பின் தாய்மொழிப் பாடவேளையின் போது நடைபெற்றது.

முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கைகளாக மாணவர்கள் சொல் மற்றும் வாக்கியம் உருவாக்கும் விளையாட்டு, துண்டுகள் இணைத்து எழுத்து உருவாக்கும் விளையாட்டு ஆகியவற்றில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 





 
















 







தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை என்றும் நேசிக்கும் வகையில் விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் அமைந்தன எனலாம்.