திங்கள், 11 ஏப்ரல், 2011

‘நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம்’

இவ்வாண்டு தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு புதுமையான போட்டி நடத்தப்பட்டது. அதுதான், நானும் செய்திவாசிப்பாளர் ஆகலாம் போட்டி ஆகும். இப்போட்டியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் செய்திகளைச் சுயமாக எழுதி, அவற்றைச் செய்திவாசிப்பாளர் போல் வாசித்தனர். அவர்கள் வாசித்தது பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட படச்சுருள்களைக் கொண்டு மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டு, அப்போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு அப்போட்டியில் முதல் மூன்று நிலைகளில் வந்த மாணவர்களின் படச்சுருள்கள் பின்வருமாறு:

மூன்றாம் நிலையில்

இரண்டாம் நிலையில்

முதல் நிலையில்

திரு.காலிட்டுடன் ஒரு சந்திப்பு

தமிழ்மொழி வாரம் தொடங்கிவிட்டது!

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கிறது. இன்று (11/04/2011) நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தின் போது, தமிழ்மொழி வாரம் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று தொடக்கம், வெள்ளி வரை (15/04/2011) அனுசரிக்கப்படும் இத்தமிழ்மொழி வாரத்தின் போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் நீங்கள் காணலாம்.

இவ்வாரத்தின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!





'முத்துக்குவியல்' - கட்டுரை புத்தகம்

கடந்த 08/04/2011 அன்று S2 குழுமப் பள்ளிகள் இணைந்து தயாரித்த முத்துக்குவியல் என்ற கட்டுரை புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வெளியீட்டு நிகழ்ச்சி பெய் தொங் தொடக்கப்பள்ளியில் நடந்தேறியது. அதில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுடன் தமிழாசிரியர்களும் கலந்துகொண்டார்கள்.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகத் தேசிய கல்விக் கழகத்தின் துணை பேராசிரியர் முனைவர் A.Ra.சிவகுமாரன் வந்திருந்தார். நிகழ்ச்சியின்போது, சிண்டாவின் மூத்த இயக்குநர் திருமதி.சரோஜினியும் கலந்து கொண்டு, மாணவர்களுக்குத் தன்முனைப்புப் பேச்சு ஒன்றை நிகழ்த்தினார்.

நம் பள்ளி மாணவர்களான யூசுஃப் மற்றும் மிர்சான் எனக்குள் பலர் என்ற அங்கத்தை அந்நிகழ்ச்சியில் படைத்தனர். யூசுஃப் பல குரல்களில் பேசி, அங்குக் கூடியிருந்த அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.


2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் S2 குழுமப் பள்ளிகளில் பயின்ற தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறு மாணவர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகள் முத்துக்குவியல் என்ற இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இந்நூல் தற்போது தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது உறுதி.













வியாழன், 7 ஏப்ரல், 2011

பள்ளியில் தமிழ்மொழி வாரம் 2011



தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கவிருக்கிறது. இவ்வாண்டு அவ்வாரம் 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இவ்வலைப்பூவில் காணலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

புதன், 6 ஏப்ரல், 2011

தமிழோசை போட்டிகள் 2011

கடந்த 5 ஏப்ரல் 2011 அன்று நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தமிழோசை 2011 போட்டிகளில் பங்குபெற்றனர். வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு போட்டிகள் அன்று நடத்தப்பட்டன.

தொடக்கநிலை 1 பாடல் போட்டி
தொடக்கநிலை 2 சொல் உருவாக்கப் போட்டி
தொடக்கநிலை 3 கதை சொல்லும் போட்டி
தொடக்கநிலை 4 வேடமேற்று நடித்தல் போட்டி
தொடக்கநிலை 5 கோலம் வரையும் போட்டி
தொடக்கநிலை 6 விளம்பரம் செய்தல் போட்டி

மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் ஈடுபட்டார்கள். அவர்களின் முயற்சிகளுக்குக் கை மேல் பலன் கிடைத்தது.

முடிவுகள்
லோக ஜனனி (1 Opal) ஆறுதல் பரிசு
முகம்மது ரியாஸ் (2 Ruby) இரண்டாம் பரிசு
ஜோஷிகா & ஷாலினி (4 Opal) மூன்றாம் பரிசு
அப்துல் தஸ்லிம் (5 Ruby) & M.அஜெய் (5 Sapphire) மூன்றாம் பரிசு
சபின் சாரா (6 Topaz) இரண்டாம் பரிசு

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் பங்குபெற்ற மற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சி அன்று பார்வையாளர்களாக வருகை அளித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி!

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:



வியாழன், 31 மார்ச், 2011

தமிழ் மொழி மாதம் ஆரம்பம்!

01 ஏப்ரல் 2011 தொடக்கம் 24 ஏப்ரல் 2011 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.thangameen.com/tmvizha என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல், 01 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் தமிழ்மொழி மாதத்தின் தொடக்கவிழா (தமிழா தமிழா) நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படும். அதனை உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து காணத் தவறாதீர். அந்நிகழ்ச்சியை நீங்கள் mediacorp.sg/tlf2011 என்ற இணையத்தளம் வாயிலாகவும் காணலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இந்த வலைப்பூவில் காணலாம்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

செவ்வாய், 22 மார்ச், 2011

மாணவர்களுக்கான வளமூட்டும் வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் கைப்பாவைப் பயிலரங்கு
தொடக்கநிலை மூன்று & நான்கு மாணவர்கள் பேச்சு, நடிப்பு பயிலரங்கு
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் தன்னம்பிக்கை உரையாற்று பயிலரங்கு

மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள இவ்வகுப்புகள் நிச்சயமாகத் துணைபுரியும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 21/02/2011

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 21/02/2011 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தமிழ் மாணவர்கள் அனைவரும் Backspace அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குப் பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு மாணவர்களுக்கென புதிதாக வாங்கப்பட்ட சில புதிய கதைப்புத்தகங்களும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

















அதனைத் தொடர்ந்து, அப்துல் தஸ்லிம் என்ற தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவன் தான் படித்த ஒரு கதையைப் பற்றி கூடியிருந்த மாணவர்களிடம் கூறினான்.










இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களைப் பள்ளி நூலகத்தில் உள்ள கதைப்புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கத் தூண்டிய வண்ணம் அமைந்தது எனலாம்.


வாசிப்பை நேசிப்போம்!

சனி, 19 பிப்ரவரி, 2011

சொற்போர் 2011 தேர்வுச்சுறறு


19/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2011 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்றுகள் தொடங்கின. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தஸ்லிம் (5R), மணிகண்டன் (5O), ஜமீர் (5O), சபின் (6T), பாத்திமா (6R))

'கைத்தொலைபேசிகளால் அதிகத் தீமைகளே விளைகின்றன' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.












நம் பள்ளி மாணவி, பாத்திமா நாச்சியா (6 ரூபி) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!