வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதிய மின்கற்றல் தளம் ஆரம்பம்!

சென்ற திங்கட்கிழமை (24/01/2011), 'பழகு தமிழ்' என்ற புதிய மின்கற்றல் தளம் தொடக்கநிலை ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிகளை இணையத்தைப் பயன்படுத்திச் செய்ய இந்த மின்கற்றல் தளம் உதவுகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்ட பயிற்சிகளை வீட்டில் இருந்தபடி செய்யவும் முடிகிறது. பயிற்சிகளை மாணவர்கள் எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று ஆசிரியர்களால் கண்காணிக்கவும் முடியும். தொடக்கநிலை ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மின்கற்றல் தளம் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.


தமிழ்க் கற்பதைப் பயனுள்ளதாகவும் உள்ளத்திற்கு இன்பமூட்டுவதாகவும் அமைத்துக்கொள்ளப் 'பழகு தமிழ்' மின்கற்றல் தளம் பெரும் துணைபுரியும் என்பது திண்ணம்! 

சனி, 1 ஜனவரி, 2011

2011 வருக! வருக!

இனிய நினைவுகளுடன் 2010-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

புதிய உத்வேகத்துடன் 2011-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும்.

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!

25/11/2010 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தலை சிறந்த மாணவர் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதோடு, 267 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!

சென்ற ஆண்டினைப் போலவே, இவ்வாண்டும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், சிறப்புத் தேர்ச்சி விகிதத்தில் தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.